Tuesday, June 3, 2025

பாலூட்டி வாழ்வு

 பாலூட்டி வாழ்வு


அணுத்திரட்சியின் நுண்வெளி

அண்டத்தில் கருஉருவானோம்.!

பாலூட்டிகளாகத்தான் பிறந்தோம்.!

மழலை மாறும்வரை மாறாதிருந்தோம்.!

இது இங்கே இப்படியானதைக் கற்பித்தது.!

கற்றதனால் பெற்றவற்றால் மாறினோம்.!

நான் ஆணாக... அவள் பெண்ணாக...

மேலும் கற்றோம்... ஆழம் உற்றோம்.!

கற்றதையும் கற்பித்ததையும்

மாற்றுவதற்கு கற்றுக் கற்பிக்கிறோம்.!



அணுவணுவாய் திரட்டுகிறோம்

அண்டவெளி கடந்து செல்ல.! 

திரள்... திரட்டு... மாறு... மாற்று...

எனும் மந்திரப்பாட்டை 

செங்கருநீலச் சங்கோசையுடன்

முழங்குகிறோம் இயன்றமட்டும்.!

ஊழிப் பெரும்பசி

 ஊழிப் பெரும்பசி

யாரங்கே.!

பெருந்தீனிக்காரனென்றும்

பேராசைக்காரனென்றும்

மூத்திர முடுக்குகளில் நின்று

முணுமுணுத்துப் பேசுவது.!


நானே சொல்கிறேன்.! 

கேளுங்கள்.!

வேனிற்காலத்து 

வெந்தளிர்க் கன்று நான்.!

கொடும்பசிக் காலத்து 

கொடும் புலிப்பரள் நான்.!

ஆம்,

எனக்கு 

பெரும்படையல் வேண்டும் தான்.!

நான் உண்பவை நாழியுமல்ல 

நான் உடுப்பவை இரண்டுமல்ல.! 

ஊழிக்காலத்து பெரும்பசி எனது.!


உண்டால் அம்ம இவ்வுலகம் 

எனக்கு ஊட்டிவிட்டதுண்டோ.!

என் மலரா உலகத்துள்

மன்னர் உயிர்த்ததுண்டோ.!

விலங்கனைய என்

ஏதிலி வாழ்வும் பின் மதிப்பும்

அனுபவித்துக் கடந்தால்

அப்போழ்தே மேலுலகமாம்.!


என் கதை கொடிது.! பெரிது.!

இனிதும் கூடத்தான்

ஆனால்

பார்க்க.. படிக்க... கேட்க மட்டும்.!


என் தொல்பசிக் கதைகளால்

இலக்கிய வாய்களுக்கு 

வாய்க்கரிசி இடுகிறேன்.!

பிழைத்துக் கிடக்கட்டும் தமிழ்த்தாய்.!


வழிநெடுகிலும்

வருணமாய் வர்க்கமாய்

உழைத்துக் கிடக்கிறேன்.!


வியர்வை ஒழுகும் 

என் முதுகுத் தழும்பில்

சாட்டை இட்டது 

நீங்கள் தானோ.!


கொஞ்சம் நில்லுங்கள்.!

எடுத்து வருகிறேன்.!

என் வீட்டிலும்

உண்டு ஒரு சாட்டை.!


- சி. விஜய்