Thursday, August 26, 2021

போர்வையும் பேகனும்


போர்வையும் பேகனும்...


அடர்வனத்துக் குளிரின்

அருமையை அனுபவித்து...

ஈர இறகை மென்காற்றில் 

உலர்த்திச் சிலிர்க்க

எத்தனித்தபோது.!


பட்டப்பெயர் பேகன்களின்

வள்ளன்மைப் பசிக்காய் வீசப்பட்ட...

போர்வைக் கட்டுக்குள் முடங்கி...

புழுக்கத்தில் அழுந்தும்

தோகையர் கோடி.!


அக்கினிக் குஞ்சொன்றை 

அப்போர்வைக்குள் வைப்போம்.!

வெந்து தணியட்டும் காடு.! - புகழ்

பேகன்களின் வள்ளன்மையோடு.!

- சி.விஜய்

இரவு அகராதி

 

எனது 'ங்ஙா.!' கவிதைத் தொகுப்பிலிருந்து...

இரவு அகராதி

கீழ்வான் செவ்வெனக் கக்கி, 

அசைவு யாவுக்கும்

அடையென நிறுத்தற்குறியிட்டு!

குற்றக் குன்றத்திலும்,

மறை என்றேற்றுக் 

கற்ற அல்லது கற்பிக்கப்பட்ட

நம்பிக்கை மேடுகளின் மறைவுகளிலும்,

மருந்தை நிறைத்துத்

திரியை எடுத்துக்கொண்டு,

சத்தமின்றி!  கத்திக்கொண்டே ,

ஆர்பாட்டமாய் ஓடுகிற 

ஆதவ ஆகமத்தின் 

மொழிபெயர்ப்பாரற்ற பிரளய 

வெடிப்புக்குப் பின்னான சிதறல்களுக்கு,  

அன்றைய அனுபவத்தின் ஊடே 

அகராதிப்புட்டியை புதுமதுவூற்றி

போதைச்சொற்களை குளிரில் தோய்த்து... 

தன்னில் நிறைத்துக் கொண்டிருக்கிறது.!

இம்மோன இராப்பொழுது..!