பெற்றோரிடம் உற்ற காதல் பாசம்!
உற்றார் உறவோரிடம் பெற்ற காதல் பந்தம்!
தோழமையோடு கொண்ட காதல் நட்பு!
புத்தகக்காதல், புள்ளினக்காதல், என
புதுப்புதுக் காதலின் முகிழ்வில் தானே
மனிதம் தினமும் உயிர்பெற்று உலவுகிறது!
உயிர்கள் எல்லாம் கொள்ளும் உறவில்
மனிதக்காதல் ஒரு சிறுபங்கே!
ஈர்ப்பும் விலக்கும் காதற் காந்தத்தின் பொதுவியல்புகள்!
பிரிவினைகள் பிரிந்துவிட்டு உயிரிணையை ஈர்த்து நிற்கும்!
பேதமைகள், மேதமைகள் வேதமுறை என்ற
பலவும் தேவையில்லை விலக்கித் தள்ளும்!
பாரதிகண்ட அக்கினிக்குஞ்சு காதல்!
அவன் தாசன் கண்ட சிம்புட்பறவை காதல்!
கோதை ஒருத்தி கோபாலன்மேல் கொண்டதும் காதல் தான்...
என்றாலும்!
இளவரசன், கோகுல்ராஜ் என
தண்டவாளங்களில் கண்டம்சிதறி கிடப்பதுமேனோ?
சகமனித அன்புதான் மதங்களின் இலக்காம்...
எனில் காவிக்கும், பச்சைக்கும், வெள்ளைக்கும் இடையே
காதல் வந்தால் என்னவாம்...?
தனிமனித மனங்களெல்லாம் தூக்கிச் சுமந்த காதல்
இன்று தூற்றித் திரியும் காலமாய்
திரிந்துபோகக் காரணமென்ன?
இதைச் செய்ய வைத்தவன் யார்?
அவன் நோக்கமென்ன?
உயிரின் தேவையான காதலை,
உடலின் தேவையென எள்ளுவதேன்?
பணமும், பகட்டும்,
நிறமும், இனமும்,
குலமும், சாதியும், மதமும்
சரிநிகரென்றால் தான்,
சமமாயிருந்தால் தான், வருமென்றால்
அது காதலின் வகையில் சேராது!
கணிகையர் காமுகர் கயவர்களிடையிலான
உடல் வியாபார ஒப்பந்தமாகிப்போம்!
எனில் எது காதல்?
அது என்ன செய்யும்?
பிரித்து வைத்தப்பிரிவுகள் யாவையும்
தோலுரித்துக் கிழித்தெறியும் காதலின் வல்லமை!
உயிர்களிரண்டு உறவுகொள்ள
உடலின்... உலகின்... வரையறைகள் எதற்கு?
மென்மை தான் காதலின் புறத்தோற்றம்!
அன்புதான் தான் காதலின் அடிநாதம்!
ரவுத்திரம் காதலின் அகப்பொருண்மை!
காத்திரம் காதலின் ஆத்மார்த்தம்!
கயமைகள் யாவும் தடைபல இட்டும்,
காட்டாற்றுப் பாய்ச்சலாய் கடைமடை வந்தேறும்!
குறுக்கத்தி மலருக்கும்
செருக்கத்தி வீச்சுக்கும்
முடிச்சுபோடும் காதல்!
புனிதங்களில் புதைபட்டு
புண்ணியமென புகுத்தப்பட்டவற்றில்
புதுமைகளை எழுதிப்பார்க்கும்! -காதல்
புதியோர் பூமி செய்யும்!
குரோதமும் குதர்க்கமும் பேசிப்பேசி
பேதமைகள் வளர்த்தெடுக்கும், குறுநரிகள்
குரல்வளையைப் பேர்த்தெடுத்துப் பீறிப்போடும்!-காதல்
நிச்சயமாய் மிச்சமின்றி கீறிப்போடும்!
காதலீர்!
மென்மையை பெண்மையிடம் வையும்
கடுஞ்சின வன்மையாய்...
காதலீர்!
இக்கயவர் தலைக்கொய்யும்!
காதலிற் சிறந்தது காமக்காதலே
என்கிறது தமிழ்சங்க ஓலை!
ஐந்திணைக் காமத்தை காதலென்றும்!
காமத்துப்பாலை இன்பத்துப்பாலென்றும்
நாம அடைகள் மாற்றிவைத்து நாகரீகம் என்றதெல்லாம்
நாம் மாற்ற வேண்டுமன்றோ!
காதலொன்றே பேரழகு!
காமக்காதலே பேரன்பு!
காதலும் நட்பும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்!
ஓர் இதயக்குருதியைப் பரிமாறிக்கொள்பவை!
காதலின் நட்பு சிறப்பென்று அறியாதார் பேசித்திரிவார்!
நட்பின்றேல் காதலேது?
காதலின்றேல் நல்நட்பேது?
இரண்டும் ஓருயிரின் அகத்தன்பின் மையமன்றோ!
ஓ! உலக மாந்தர்களே!
நம்மைப்பிரித்து வைக்க ஆயிரமுண்டு!
இணைத்து வைக்கக் காதலே உண்டு!
ஆதலினால் காதல் செய்வீர்!
கைகூடாக் காதலால் காதலே கூடாதென்றால்!
தாயன்பு கிட்டாதான் பிறப்பே பெறக்கூடாதே!
கூடும்வரை காதலிப்போம்!
உலகக் கூட்டுறவை காதல் செய்யும்!
ஆதலினால் காதல் செய்வோம்!
மீண்டும் கூறுகிறேன்!
காதல் ஒரு உயிரின் விசை!
காதல் சமத்துவ உலகைச் செதுக்கும் வல்லுளி!
காதல் பிரிவினைப் பேயழிக்கும் வாதை!
ஆதலினால் காதல் செய்வோம்!
ஆன மட்டும் காதலுக்குத் துணைநிற்போம்!
என்ன கேட்டீர்கள்?
நீ காதலித்தாயா என்றா?
சொன்னதை ஆராயாமல்
சொல்பவனை ஆராயும் தமிழினமே!
நான் கவிதைக்காதலன் விஜய்!