Saturday, January 31, 2026

சூது பவளம் கண்டேன் அல்லேன் - கவிதை நூல்

கவிஞர் வி.சங்கர் எழுதிய 'சூது பவளம் கண்டேன் அல்லேன்' எனும் நூல் அறிமுக நிகழ்வில் பங்கேற்றேன்.


பல பிரயத்தனங்களுக்குப்பின் வி.சங்கரின் கவிதைகளை வாசித்து... 

நூல் குறித்து நானும்... 

அதுவாவது...

வி.சங்கர் மரபார்ந்தச் சொற்களால் தனியொரு நடையில் ஒரு நவீன உலகை வடித்துக்காட்டியிருக்கிறார். நான்கு பிரிவுகளாக அமைந்துள்ள நெடுங்கவிதைகளாக நூல் ஆக்கம் பெற்றுள்ளது. சில வரிகள் ரசிக்க வைத்தன. பல வரிகள் சமீபத்தில் எங்கோ வாசித்தது போன்றிருந்தன. மு.மேத்தா, கலாப்பிரியா, விக்கிரமாதித்யன், அபி, சுப்ர பாரதிமணியன் கவிகளின் தாக்கம் இருப்பதாகப்பட்டது. அகமனத்துணர்வுகளை விரித்துப்போடும் லாவகத்தை வாசிப்பில் பெற்றுவிட்டபின் கவிதை முனைதல் இயல்பானது. நன்முயற்சியும் கூட. கவிதை கண்டு / கொண்டு வியந்தேன் அல்லேன். ஆயினும் இப்படைப்பு ஒரு சிறந்த கவிதை முயற்சி என்பேன்.

சங்கரின் தேர்ந்த வாசிப்பில் வசப்பட்ட மரபுச் சொல்திறம் கவிதைக்குள் உள்ளடக்க வலுவற்று திக்கற்று, இலக்கற்றுத் திரிகின்றன. மரபுச் சரடுகளை எத்தனைதான் தூசுதட்டி நவீனத்தை உடுத்தினாலும் மரபின் கசடுகளைத் துடைத்தெறிய முடியாமல் தடுமாறித்தான் போகிறோம். சமூகப் பிரக்ஞை ஏதுமற்று காணும் காட்சிகளிலும் உணர்தல்களிலும் பித்து நிலைக்குப் போய் சொத்தை விளம்பல்களாகக் கவிதைகள் நின்றுவிட்டது போன்ற உணர்வைப் பெற்றேன். சங்கரின் சொற்பிரயோகங்கள் கவர்கின்றன. ஆனால் கவிதைப்பயனாக பெறப்பட்டவை மிகச்சிலவே என்பது ஏமாற்றம். பெருந்தீனி தந்தாரில்லை. சிற்றுண்டி விளம்பினார் என்பேன். இப்போதெல்லாம் தனிமனித உணர்தலும் புலம்பலும் ஏனோ என்னைக் கவர்வதில்லை. அது என் குறையாகக் கூட இருக்கலாம்.

சுருங்கச் சொன்னால்... சங்கரின் படைப்பில்...

1.கருவி (மொழிவளம், சொல்லாட்சி) திறம்பட்டது...

2.செயல் (கவிதையாக்கம்) இலக்கற்றது.

3.விளைச்சல் (கவிப்பயன்) மிகக் குறைவு.

எது எப்படியாயினும் சங்கர் எனும் சகவாசகனின் ஆக்க முயற்சியை உள்ளன்போடு வாழ்த்துகிறேன். 

தன் காலத்து அறிவுச் செயல்பாட்டினரை இலக்கியப் புலத்துக்கு அடையாளம் காட்ட எத்தனிக்கும் அன்பு நண்பன் கவிஞர் மதார் அவர்களை விழிவிரியப் பார்க்கிறேன். பெருங்கவிகள் செய்யத்தவறிய செயலதுவாதலால்.! 

கவிஞர்கள் வண்ணதாசன், லஷ்மி மணிவண்ணன், மதார், இளம்பரிதி மற்றும் விமர்சகர் ஈஸ்வரன், எழுத்தாளர்கள் சங்கர் ராம், மோகனரங்கன், இளங்கோமணி, திவ்யா ஈசன் உட்பட பலர் அமர்வில் பங்கேற்று சிறப்பித்தார்கள். 


எழுத்தை ஆய்ந்தறியும் ஆவல்மிக்கக் குழாமோடு கலந்ததில் மகிழ்ச்சி.! நன்முயற்சிகள் தொடரட்டும். வாழிய தமிழ்க் கவிப்புலம்.


-சி.விஜய்