முதுமையும் இளமையும்
இளமையும் முதுமையும் மோதிக்கொள்ளும் சூழல்களை காலம் எப்போதும் வழங்கிவருகிறது. தம் இளமையில் ஆயிரமாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வளித்த, சகமனித அன்போடு வாழ்ந்து மனிதர்களை சம்பாதித்த, சுய ஒழுக்கமிக்க மாபெரும் ஆளுமைகளை நாம் கண்டிருக்கிறோம். வியந்திருக்கிறோம். ஆனால் அவர்களின் முதுமைகாலக் கருத்துக்களின் முரண்களினால் இந்தத் தலைமுறை அவர்களிடமிருந்து தன்விலக்கு அடைந்துவிடுகிறது. முதியவர்களின் அனுபவங்களை முழுவதும் புறக்கணித்தல் அல்லது பழமரபுகளில் புதைந்துத் தேங்குதல் என்பதைத் தாண்டி இன்னொரு மார்க்கமும் உண்டு. அது, ‘நம் முன்னோர்களின் வாழ்விலும் கருத்திலும் சமகாலத்திற்கும் அறிவுக்கும் ஏற்றவைகளாகவும் சமூகக் கூட்டுறவை மேம்படுத்துவனவாகவும் மிகுபயன் தருவனவற்றை எடுத்துக் கொண்டு வாழ்வதே'
நம் வீட்டிலிருக்கும் முதியவர்கள் தங்கள் எல்லா தனிப்பண்புகளையும் இழந்து சார்புநிலை வாழ்க்கை வாழ வேண்டியச் சூழலுக்கு உள்ளாகும்போது குடும்பத்துக்குள் நடக்கிற சில குழப்பங்களை காரண காரியங்களோடு புரிந்துகொண்டு சூழலுக்கேற்ப நம் வீட்டுப் பெரியவர்களைக் கரிசனையோடு அணுக வேண்டியது இளைய தலைமுறையின் கடமையாகும்.
முதியவர்களின் சொற்களில் வெளிப்படும் சீற்றங்கள் அவர்களின் உண்மை உணர்வுகளின் வெளிப்பாடுகள் அல்ல. தங்கள் உடல் வலுவின்மையால் எதிர்கொள்ளும் இயலாமையினாலும்… காலத்தின் மாற்றங்களில் அவர்களால் பொருந்திப்போக முடியாததினாலும்… சில பழைய மரபுகளின் மீது அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கைகளினாலும் விரக்தியின் விளிம்பிலிருந்து வெளிப்படுவனவே. ஆகவே சில அசாதாரணமான சூழல்களில் நாம் கணக்கில் கொள்ள வேண்டியது பெரியவர்கள் பேசும் சொற்களையோ அதன் நேரடிப் பொருள்களையோ அல்ல. அதன் பின் இருக்கும் / இயங்கும் காரணங்களையே.
முதுமையும் மழலையும்
ஏறத்தாழ ஒன்றேதான். மனித இயல்புகளில் தம் இயலாமையை மறைத்தலும் முக்கியமானதாகும்.
நம் வீட்டுப் பெரியவர்களை நன்றாகக் கவனியுங்கள். உடல் நலமில்லா நேரங்களில் கூட அவர்களால் வீட்டைச்
சுத்தமாக்குவது, தோட்டங்களை கவனிப்பது, குழந்தைகளைக் கண்காணிப்பது, வரவு செலவுகளை மேற்கொள்வது
என தங்களை வருத்திக்கொள்ளவே முயற்சிப்பார்கள். அவர்கள் அடுத்த தலைமுறை மீது கொண்ட அன்பின்
மூலமாக உருவாகும் தியாக உணர்வின் வெளிப்பாடு அது. தான் பயனற்றவன் என்பதை எந்த பெரியவரும் ஏற்றுக்கொள்ள
மாட்டார். தம் இந்தத் தலைமுறை தாம் ஒரு ஆளுமையாகவே அறியப்பட வேண்டுமென்பதில் உறுதியாக
இருப்பார்கள். அவர்களின் பழம்பெருமை குறித்த சொல்லாடல்கள் இதனை
உறுதிப்படுத்தும்.
அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.!
இயன்றவரை நம் வீட்டுப் பெரியவர்களை அன்போடு பார்த்துக்கொள்வோம். நம் வாழ்வுக்கும் வளத்துக்கும் கனவுக்கும் உரமாகி நின்ற அவர்களின் நிறைவேறாத ஆசைகளுக்கு உயிர்கொடுப்போம். நம் வருடாந்திர சுற்றுலாக்களில் அவர்களையும் அவர்கள் விரும்பும் சில புண்ணியத் தலங்களையும் இணைத்துக்கொள்வோம். அவர்களின் வேலைகளை இயன்றவரை குறைப்போம். அதன் வழியாக அவர்கள் நம்மோடிருக்கும் நாட்களை
அதிகப்படுத்தலாம். பெரியவர்கள் தங்கள் வாழ்நாட்களை சாதனைகளாக நினைத்துப் பார்த்து
புளங்காகிதமடைய எண்ணுவார்கள். அதன் காரணமாகவே நம்மிடம் கேட்டுக்கேட்டு அலுத்துப்போனக்
கதைகளைக்கூட சிலாகித்து சொல்லிக்கொள்வார்கள். சிறிய காரியத்தை
பெரும் தொடராக நீட்டிச் சொல்வார்கள். எது எப்படியாயினும் அவர்களின் கதைகளுக்கு காதுகொடுப்போம். அது அவர்களின்
மன இறுக்கத்தைக் குறைக்கலாம்.
அவர்கள் காலத்து அரசியல், சினிமா, காதல், கிசுகிசுக்கள், உணவு மற்றும் இயற்கைச் சூழமைவுகள் என எல்லாமே கொஞ்சம் சுவாரசியமானவை தான். அவற்றை அவர்கள் சொல்லும்போது நீங்களும் சிலாகித்துக் கேட்கிற பக்குவத்தைப் பெற்றால் இதனை நீங்களும் உணர்ந்திடலாம். நமக்குச் செய்வதைப்போலவே நம் வீட்டுத் தாத்தாக்களுக்கு நாமே தாடி சவரம் செய்யலாம்.! நகம் வெட்டி, குளிக்க வைக்கலாம்.! இந்த சிற்றூழியங்கள் அவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும். இதையெல்லாம் செய்து நம் வீட்டுப் பெரியவர்களிடம் பெற முடியாத ஆசியை நாம் எந்தக் கடவுளிடம் பெற்றுவிடப்போகிறோம்.?
அன்பைத் தவிர இங்கே எதை நாம் அனுபவித்துவிடப் போகிறோம்.! பெற்றுவிடப் போகிறோம்.! பகிர்ந்துவிடப் போகிறோம்.!
நாம் நம் பாட்டியிடம் அடைந்த அந்த அன்பின்
வெளிப்பாட்டை இந்த உலகில் வேறு யாரிடமும் பெற்றிருக்கவில்லையே. எத்தனை
உரிமையுள்ள உறவு... எத்தனை சொற்களிருந்தும்
விவரிக்க முடியாதஅன்பு..!
நமக்குக் கிடைத்த அந்த பெரும் பேறு நம் வீட்டின் எல்லாக் குழந்தைகளும் பெற்றுவிட வேண்டுமென்றே பேராவல் கொள்ள வேண்டாமோ.!?
ஒன்றை நிச்சயமாய்
நினைவில் நிறுத்திக் கொள்வோம்.!
‘நம் குழந்தைப் பருவத்தில் நம் வீட்டுப் பெரியவர்களிடம்
அடைந்த பாதுகாப்பான உணர்வை… அவர்களின் முதுமையில் நாம் திருப்பித் தருவது தானே நம்
வாழ்வின் ஆகச்சிறந்த. அறமாக இருக்க முடியும்.!'
பெரியவர்களை மதிப்போம்.! உதவுவோம்.! பேசுவோம்.!
எனில் நாம் நிச்சமாக வாழ்வோம்.! நலமுடனும் வளமுடனும்.!
பேரன்புடன்
நான் விஜய்.

1 comment:
அருமையான பகிர்வு. கூட்டுக்குடும்பங்கள் குறுகி அருகிவிட்ட இக்காலத்தில் உறவுகளின் உன்னதம் புரிவதில்லை பலருக்கு.
Post a Comment