Wednesday, January 3, 2024

கலத்தலும் மறத்தலும் அத்தனை எளிதா.?



காலத் திரட்டினைத் திருப்பிப் பார்.!

அன்றொரு நாள்

வானினும் அதிகமாய் காதல் செய்தோம் நினைவாயா.! 


நம்மை நாமன்றி 

பிறரறியா அளவில்

இரண்டறக் கலந்தோம்.! 

ஆம் நாம் காதல் கொண்டோம்.!

காமம் களித்தோம்.!


உற்றுப்பார்..!

காலத் திரட்டின் அடுத்த பக்கங்கள் இருண்டிருக்குமே.!

நீ கவலை என்றாய்

என்முன் அடிக்கடி சோர்ந்து நின்றாய்.!

மிகு ரணங்கள் என்றாய்.!

ஆறாது நின்றாய்.!


காதலில் தேறுதல் சொன்னாய்

ஆற்றுவிக்கத் தானே உள்ளத்தைத் தந்ததுபோல் 

உள்ளதையெல்லாம் உன்னிடம் தந்தேன்..!


பெற்றவனாய் பேர் பெற்றோம்.!

அன்றிலிருந்து

உற்றவனாய் அல்ல 

மற்றவனாயும் நீயில்லை.!


நீ ஆறி விட்டாய் 

என்னில் மாறா ரணங்களை

இறக்கி வைத்துவிட்டு..!

சுயமிழந்த நானோ 

சுமையோடு நிலையழிந்தேன்.!

உன்னைப் பெறுவதற்காய்...

உன்னையே அடைகின்ற திமிரில்...

உலகை... உறவை உதறிக் கொண்டேன்.!

உதறும்போது என் உதடுகள்

உதறிய சொற்களின் வீரியத்தில் 

நீண்டிருந்தன தேள்க் கொடுக்குகள்.!


நான் சொடுக்கிய கொடுக்குகளின் விசத்தை 

என்னுள்ளேயே இறக்கியவர் நீர்.!


என் காய்களைக் கொய்து

கனிகளைப் பறித்துக் கொண்டீர்.! 

நீரற்ற வெட்ட வெளியில் நீரீன்றி நின்றிருந்தேன்.!

நீர்த்துறை வெட்டத் தானோ - ஒரு

நீள் கோடரி எடுத்து வந்தீர்.!

கிளைகளை வெட்டி என்

நிலைதனைக் குலைத்தீர்.!

நீரிட்ட தீ  இரணங்கள் 

பழகிப்போன பழமரம் இது.!

வழுக்கி விழுதலே வரலாறானவள்

வலிகளொன்றும் புதிதில்லை போ.!


ஒன்று மட்டும் தெளிவுபடுத்து.!

மரணம் வரை

ஏன் மௌனித்திருந்தாய்.?


காதலில் கலத்தலை மறத்தல்

அத்தனை எளிதா என்ன.?


சி.த. இஷா

தமிழிலக்கிய மாணவி

தூய சவேரியார் கல்லூரி

பாளையங்கோட்டை.

No comments: