Saturday, September 28, 2024

போராட்டங்கள் சரியா? தவறா?

 


தொழில் முனையும் என் நண்பர்களுக்காகவும், போராடும் மக்களை வெறுப்பாகப் பார்க்கும் பொதுசமூகத்துக்காகவும் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

உழைக்கும் மக்களின் போராட்ட அரசியல் பற்றி பொதுமக்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழிலாளிகளின் போராட்டங்கள் மூன்று வடிவில் நிகழும், நிகழ வேண்டும் என்கிறார் நா.வானமாமலை.

1.பொருள் ஆதாரப் போராட்டம்

2.அரசியல் போராட்டம்

3.தத்துவப் போராட்டம்

'போராட்டம் என்பது ஓர் அறிவியல் செயல்பாடு' என்பார் சமூகவியல் ஆய்வறிஞர் தொ.பரமசிவன். பொருளாதாரம் என்பது வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிற வாழ்க்கைக் கூறு. பொருளீட்டும் ஆதாரமாக உழைப்பாளி தன்னிடம் இருக்கிற உழைப்பை மூலதனமாக்கி விற்கிறார். முதலாளி அந்த உழைப்புக்கு ஈடாகவே பொருள் தருகிறார். முதலாளியின் லாப நோக்கு தொழிலாளியின் உழைப்பை அதிகப்படுத்தி கூலியைக் குறைக்க முயற்சிக்கிறது. திறன்மிகு தொழிலாளியைப் பெறுவதற்காக உழைக்கும் வாய்ப்பு அதாவது வேலையை வெற்றிக் கோப்பையாக்கி போட்டியை நடத்துகிறது முதலாளித்துவம். இதற்கென ஏற்படுத்தப்பட்ட கல்வி முறையும் (தொழிற்கல்விகள் Technical studies BE, Diploma, கலைக்கல்விகளில் BBA, BBM, IT&M முதலானவை) முதலாளிகளால் விலைக்கு வழங்கப்படுகிறது. (குறிப்பு: இந்த கல்விமுறை பற்றி பேச நிறைய இருக்கிறது) இங்கே உழைப்பை விற்கிற சந்தையில் முதலாளி என்பவர் நுகர்வாளராகவும் இருக்கிறார்.



மேலே குறிப்பிட்ட கல்விமுறை போலவே உழைப்பை மலிவு விலையில் கொள்முதல் செய்ய முதலாளித்துவம் பல உத்திகளை (மதம், இனம், சாதி, இன்னபிற) கையாள்வதோடு அவற்றை வாழ்வியல் நடைமுறையாக மாற்றி பொதுப்புத்தியில் உறைய வைத்துவிடுகிறது. இந்த அமைப்பை தொழிலாளி கொஞ்சமும் விரும்பவில்லை என்றாலும் உழைப்பாளியின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றைப் பெற இதற்குள் பொருந்திப்போகிற நிர்பந்தத்தை ஏற்க வேண்டியுள்ளது. 

உற்பத்தியில் முதலாளியின் பங்களிப்பான பொருள் முதலீடும் உழைப்பாளியின் உழைப்பு முதலீடும் சம அளவிலேயே இருக்கிறபோது (ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழித்தால் உற்பத்தி நிகழாது) உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்தி லாபத்தை சுருட்டிக்கொள்கிற போக்கையே முதலாளித்துவம் என்கிறேன் நான். மிகத் திட்டமிட்டு நடைபெற்ற இந்த முறை இப்போது பொது நடைமுறையாகிவிட்டதும் இந்த முறைமைக்கு பொதுஜனம் பழகிவிட்டதும் அடிமைத்தனமன்றி வேறில்லை. 

சரி! போராட்டம் எங்கே நிகழ்கிறதெனப் பார்ப்போம்.

உழைப்பு வாணிகத்தை மேற்கொள்கிற தொழிலாளி தனது உழைப்பை உரிய கூலிக்கு யாரும் வாங்காதபோது பொருளாதாரத் தேவைகளை அடைய முடியாத ஏழையாகிறார். 


முதலாளியோ திறன்மிக்க, குறைந்த கூலி பெறுகிற (குறைந்த விலை நிறைந்த தரம்) தொழிலாளியைத் தேர்கிறார். அவரையும் மேலும் மேலும் சுரண்டுவதோடு அவரைத் திறன்மிகு தொழிலாளியாக தமக்கே எக்காலமும் உழைக்கிறபடி (பண்ணை அடிமை முறை, நவீன சீனியாரிட்டி போஸ்டிங்ஸ்) ஏற்பாடுகளைச் செய்கிறார்.

இந்த சீர்கேடுகளை வெகுசிலரே உணர்ந்துகொள்கின்றனர். உணர்ந்த சிலர் (மார்க்ஸ்) பலருக்கும் பகிர்கின்றனர். இந்தப் புரிதலை எட்டுகிற உழைப்பாளி தான் ஏமாற்றப்பட்டதை, படுகிறதை எதிர்க்கத் துணிகிறார் (துணியாதவர்களே பெரும்பான்மை அதற்கு காரணங்கள் பல).

தனக்காக, தனது வேலைக்காக, போராடவே பொருளாதாரப் போராட்டத்துக்கு உழைப்பாளி (பொதுமக்கள்) வருகிறான். மானுட அபிமானத்துடன் பிறர்க்காக போராட வருகிறவன் (சோஷலிசவாதி) தலைமையேற்கிறான். உலக நோக்குடையவன் (மார்க்ஸ்) தன் சிந்தனையால் இதனை வழிநடத்துகிறான்.

முதலாளித்துவ வலதுசாரி அரசுகளில் தொழிலாளிகளின் போராட்டம் எப்போதும் நடைபெறுகிறது. 

உண்மையில் போராட்டங்களே அரசுகளின் முதலாளித்துவ மனோநிலையின் செயல்பாட்டின் கணக்கீட்டு அளவைகள். 

போராட்டங்களை அரசுகள் அணுகுகிற முறைகளை வைத்து அந்த அரசு எத்தகைய சார்புடையது. அது யாருக்கான அரசு என்பதை முடிவு செய்யலாம்.

போராட்டம் எப்போதும் எல்லா அரசுகளையும் எதிர்த்து நடக்கும். ஒரு உழைப்பாளிகளால் அமையும் பொதுவுடமை அரசுக்கு எதிராக போராட்டம் நிகழுகிறதென்றால் அங்கே முதலாளித்துவம் நுழைகிறதென புரிந்து கொள்ளலாம். அதை போராட்டங்கள் தான் சுட்டிக்காட்டும். அதனை உடனடியாகக் களைந்தாக வேண்டும்.

கைவலிக்குது.!  மீதிய எழுதச் சொல்லி யாராவது கேட்டா அப்புறமா எழுதுறேன். சாரி.

No comments: