குட்டிக்கதை (07.04.2025)
இயங்கியல் புணர்ச்சி
இன்று அந்த ஓட்டுத் துண்டைப் பார்த்தேன்.!
அந்த நாயின் தோலும் முடியும் ஒட்டியிருந்தன.!
விழுந்த இடத்தில் தான் கிடந்தது.!
நாயும் அந்த ஓட்டுத்துண்டும்.!
இந்த கேன்டீனை விட்டால்
அந்த போக்கற்ற நாய்க்கு போக்கிடமில்லை போல.!
அந்தப் பையன் வெகுளியாய் தான் எறிந்தான்.!
நாய் தன் பெடையைச் சேரும் நிலையைக் கண்ட
யார்தான் வெகுளாமல் இருந்தோம்.!
நமக்கு நம்மவர்கள் சொல்லாமல் சொன்னதுபோல
பொதுவெளியில் புணர்வது தவறென
அந்த நாய்க்கு எந்த நாயும் சொல்லியிருக்க
வாய்ப்பில்லை தானே.!
சம்பவம் நிகழ்ந்து சில மாதமிருக்கும்
ஆனாலும் ஏதோ ஒரு குறுகுறுப்பு.!
ஓட்டுத் துண்டை வெறித்துப் பார்த்தவாறு
பழைய எண்ணை சமோசா ஒன்றை
முந்தாநாள் செய்தித்தாளில் நசுக்கி
எண்ணெய் பிதுக்கிக் கழித்த
ஆசுவாசத்துடன் பிய்த்து வாய்க்குள் ஏற்றினேன்.!
வாலை ஆட்டி ஓடிவந்தது செவலையும்
செவலைக்கு பிறந்த செவலையும்.!
ஓட்டுத்துண்டால் பிய்ந்த முதுகில்
தடம் கூட மாறவில்லை.!
தலைவன் இயற்கை இயங்கியலை
இனிதே நிறைவேற்றிவிட்டான்.!
யாரோ எறிகிற ஓட்டுத்துண்டு விமர்சனங்கள்
நம் முதுகை சொரிய மட்டுமே!
வேலையைப் பாரடா வெண்ணை மகனே.!
என தன்னைத்தானே தேற்றிக்கொண்டு
வந்துவிட்டேன் தேர்வ(றை)ரை கண்காணிக்க.!
ஏனோ நாய்குட்டிக்கு
சிறுதுண்டு சமோசா கூட தரத் தோன்றவில்லை.!
உலக இயங்கியலை
என் இருத்தலியம்
வென்றிருக்குமோ.!?
#தமிழ் #கவிதை #கதை

No comments:
Post a Comment